சிங்கப்பூர் மற்றும் தென்கிழக்கு ஆசியா எனும் படப்பேழை
சிங்கப்பூரைப் பற்றி இப்புகைப்படங்களும் அஞ்சல் அட்டைகளும் என்ன கதையைச் சொல்கின்றன? ஒழுங்கான, கண்களுக்கினிய, நம்பிக்கைக்குரிய, ஏன், கவர்ச்சியான ஒரு கதையையா அவை சொல்கின்றன? இல்லை, காலனித்துவ அதிகாரிகள் சொல்ல விரும்பிய கதையாகத்தான் அது இருந்திருக்கக்கூடும். ஜி.ஆர். லேம்பர்ட் & கோ. படப்பிடிப்பகத்தால் உருவாக்கப்பட்ட இப்படங்கள் வெறும் பதிவுகள் மட்டுமல்ல. காலனித்துவத் தென்கிழக்கு ஆசியாவை உலகம் எப்படிப் பார்த்தது என்பதை வடிவமைப்பதில் அவை உதவின.
1867-ல் குஸ்டாவ் ரிச்சர்ட் லேம்பர்ட் (Gustave Richard Lambert) அவர்களால் நிறுவப்பட்ட இப்படப்பிடிப்பகம், 1890-களில், சயாம் (Siam) மன்னர் மற்றும் ஜோகூர் சுல்தானின் அதிகாரப்பூர்வப் புகைப்படக் கலைஞராக நியமிக்கப்படுகிற அளவுக்கு அந்நிறுவனம் பெரும் வெற்றி பெற்றது;. அது அக்காலத்தில் ஓர் அரிய கௌரவமாகும். தென்கிழக்கு ஆசிய அரசக் குடும்பத்தினரைப் பொறுத்தவரை, அப்புகைப்படங்கள் வெறும் உருவ ஒற்றுமையைப் பற்றியவை மட்டுமல்ல; அவை நவீனத்துவத்தையும், புகைப்படக் கலையின் வளரும் ஆற்றலையும் உணர்த்தின.
பட அஞ்சலட்டைகளாகப் புழக்கத்தில் விடப்பட்ட, நுட்பமாக உருவாக்கப்பட்ட இக்காட்சிகள், கடல்களுக்கு அப்பால் பயணம் செய்து, தொலைநில மக்கள் வெப்பமண்டலப் பகுதிகளைப் பற்றி கற்பனை செய்த விதத்தைப் பாதித்தன. ஆனால் அது நெடுநாள் நீடிக்கவில்லை. 1914-ல் முதலாம் உலகப் போர் வெடித்தவுடன், அதற்கான தேவை குறைந்து, அப்படப்பிடிப்பகம் மூடப்பட்டது.
இருப்பினும், லேம்பர்ட் அவர்களின் புகைப்படங்கள் ஒரு நீடித்த உண்மையைப் பற்றி நமக்கு நினைவூட்டுகின்றன: யாராவது ஓர் இடத்திற்குச் செல்வதற்கு முன்பே, அந்த இடத்தைப் பற்றிய ஒரு கருத்தை விற்பனை செய்வதில் படங்களுக்கு உள்ள ஆற்றல்தான் அது. காலப்போக்கில், அந்நிலப்பரப்பைச் சேர்ந்த கலைஞர்கள் இந்த வெளிப்புறப் சித்தரிப்புகளுக்குப் பதிலளிக்கத் தொடங்கினர். அவர்கள் அந்நிலப்பரப்பின் மக்கள், இடங்கள் மற்றும் பண்பாடுகளால் ஈர்க்கப்பட்டு, அவைகளைப் பற்றிய தங்களின் சொந்த விவரிப்புகளை முன்வைத்தனர்.
