நாடக பாணியில் அமைந்த இந்தப் படைப்பில், மிருகங்கள் காட்டுத் தீயிலிருந்து தப்பித்து, உயர்ந்த செங்குத்தான பாறையின் விளிம்பிற்கு ஓடுகின்றன. கலங்கியோடும் விலங்குகள் இந்த படைப்பை ஆக்கிரமித்து இருந்தாலும், ஒரு உறுமும் புலி மையப்புள்ளியாய்ப் படைப்பைத் தாங்கி நிற்கிறது. பாறையின் விளிம்பிலிருந்து பாய்வதற்கு முன்னால், அந்தப் புலி, ஊடுருவும் தன் கண்களால், பார்ப்பவரை நேராகப் பார்க்கிறது.
ஐரோப்பாவில் ராடென் சாலேவின் வெற்றி உச்சத்தில் இருந்தபோது,
காட்டுத்தீ ஓவியம் உருவாக்கப்பட்டது. மத்திய ஜாவாவில் செமாராங் பகுதியை சேர்ந்த ராடென் சாலே, அவரது 18-வது வயதில், ஐரோப்பாவிற்குச் சென்று, 20 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கேயே வாழ்ந்தார். இரு டச்சு ஓவியர்கள் நடத்திவந்த ஓவியக்கூடத்தில், ஓவியம் கற்றார். தன் சொந்தப் படைப்புக்களை கௌரவமான கண்காட்சியில் இடம்பெறச் செய்ததாலும், உயர் வர்க்கங்களின் ஆதரவைப் பெற்றதாலும், தனக்கென ஒரு தனியிடத்தைப் பிடித்தார்.
இது ராடென் சாலேயின் படைப்புகளில் மிகப்பெரியதாகும். அதன் இந்த அளவு, ஒரு ஓவியராக அவரது உயர்ந்த நோக்கத்தைப் பிரதிபலிகிறது.
வெளிநாட்டுக் கருப்பொருள்களையும், இயற்கையின் கோரத்தைக் காட்டும் படங்களையும் நாடும், 19-ஆம் நூற்றாண்டு ஐரோப்பிய புதுப் பாணியின் தாக்கத்தை இந்த ஓவியம் காட்டுகிறது. ராடென் சாலே, அதை இங்கே ஜாவானியச் சூழலில் வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த ஓவியம் 1850-ல் நெதர்லாந்தின் மன்னர் மூன்றாம் வில்லியம் அவர்களுக்குப் பரிசளிக்கப்பட்டது. அதற்கு அடுத்த ஆண்டு, ராடென் சாலேக்கு "அரசரின் ஓவியர்"
என்ற அதிகாரபூர்வமான பட்டம் அளிக்கப்பட்டது. 19-ஆம் நூற்றாண்டின் பாரபட்சமான சூழலில், காலனியை சேர்ந்த ஒரு ஓவியருக்கு இந்த அளவு அங்கீகாரம் ஐரோப்பாவில் கிடைத்தது மிகவும் குறிப்பிடத்தக்கது.