யின் யாங் (Yin Yang) ஒன்று மற்றும் பல
1987-ல், ஜில் மாசோ (Gilles Massot) இணைந்து நிறுவிய 'யின் யாங்' விழாவில், அவர் 'யின் யாங் ஒன்று மற்றும் பல' என்ற படைப்பை வழங்கினார். இது மாஷேயில் இருந்து சிங்கப்பூர் வரையிலான தனது பயணத்தின் முரண்பாடுகளை ஆராயும் இரண்டு பலகைகளைக் கொண்ட ஒரு கலைப்படைப்பு.
ஒரு பலகையில், பாதி நிர்வாணமாக இருக்கும் ஒரு தனி ஆண் உருவம், அக்ரிலிக் கோடுகளால் மென்மையாக வரையப்பட்டுள்ளது. அதன் மனநிலை அமைதியாகத் தெரிகிறது. இரண்டாவது பலகை ஒரு வேறுபட்ட கதையைச் சொல்கிறது: செய்தித்தாள் துண்டுகளை ஒட்டி உருவாக்கப்பட்ட ஒரு கட்டத்தின் மீது, கறுப்பு நிற கூவாஷ் (gouache) நீர்ம நிறப்பூச்சினால் வரையப்பட்ட எளிமையாக்கப்பட்ட மனித வடிவங்கள் மற்றும் அருவச் சின்னங்களால் நிரப்பப்பட்ட 12 சிறிய சட்டகங்கள் உள்ளன. இதன் விளைவு உயிரோட்டமாகவும், ஒருவேளை குழப்பமானதாகவும் இருக்கிறது. அமைதி, செயல்பாட்டைச் சந்திக்கிறது, தனிமை, கூட்டத்தை எதிர்கொள்கிறது. மாசோவைப் பொறுத்தவரை, விளக்கம் "பொருள்களுக்கு இடையேயான இடைவெளியில்" வாழ்கிறது. பிரெஞ்சு மற்றும் சிங்கப்பூர் உலகங்களுக்கு இடையில் பயணிக்கும் ஒருவருக்கு இது மிகவும் பொருத்தமான ஒரு கருத்து. இந்தத் தொடக்கக்காலப் படைப்பு, அப்பண்பாட்டுப் பயணத்தையும், எல்லைகள், ஊடகங்கள் மற்றும் துறைகள் முழுவதும் பொருள்விளக்கம் (meaning) எவ்வாறு மாறுகிறது என்பது பற்றிய அவரது வாழ்நாள் ஆர்வத்தையும் உள்ளடக்கியுள்ளது.
யின் யாங் விழா என்பது கண்காட்சிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளைக் கொண்ட ஒரு சிறிய, ஐந்து நாள் நிகழ்வாக இருந்தது. ஓவியர்கள் ஒன்றிணைந்து யின் மற்றும் யாங் என்ற சீனக் கருத்தை ஆராய்ந்தனர். அது ஓர் ஆய்வுமுறை முயற்சி மற்றும் கூட்டு முயற்சி ஆகும்—இத்தன்மைகள் ஓராண்டு கழித்து செம்பாவாங்கில் 'தி ஆர்டிஸ்ட்ஸ் வில்லேஜ்' எனப்படும் ஓவியர்கள் கிராமம் உருவானபோது மீண்டும் வெளிப்பட்டன.
