சூரியனின் குழந்தைகள்
முதல் பார்வையில், 'சூரியனின் குழந்தைகள்' ஓவியத்தைப் பற்றி என்ன நினைப்பது என்று உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் சற்றுப் பின்னால் நின்று பார்த்தால், பன்னிறக் கடலிலிருந்து சாய்ந்தும், நீட்டியும், ஓய்வெடுத்தும் நிற்கும் மனித உருவங்கள் வெளிப்படத் தொடங்குவதை நீங்கள் காணலாம்.
கூ சூய் ஹோ (Khoo Sui Hoe) இவ்வோவியத்தை 1960-களின் நடுவில் வரைந்தார். அப்போது சிங்கப்பூர் புதிதாக விடுதலை பெற்றிருந்ததுடன், வேகமாக மாற்றமடைந்து கொண்டிருந்தது. அது துணிச்சலான தொலைநோக்குப் பார்வைகளுக்கும் பெரிய திட்டங்களுக்கும் உரிய காலமாக இருந்தது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான், கட்டடக் கலைஞர் லிம் சாங் கீட் (Lim Chong Keat) வடிவமைத்த சிங்கப்பூர் மாநாட்டு மண்டபத்தின் கட்டுமானம். இந்த முக்கியமான புதிய இடத்திற்காக, ஒரு சுவரோவியம் போன்ற ஓவியத்தை வரைவதற்காக லிம் தொடக்கத்தில் கூ-வைப் பணியமர்த்தினார்.
இவ்வோவியத்தின் அளவு வியக்க வைக்கிறது. அது இரண்டு சதுர மீட்டருக்கும் மேலான அளவுடையது. அதன் அடிப்பகுதியில் ஒரு மங்கலான கோடு செல்வதை நீங்கள் கவனிக்கலாம். அங்குத்தான் இரண்டு கித்தான்களும் இணைக்கப்பட்டுள்ளன. கூ அவ்விணைப்பின் மீது ஓவியம் வரைந்து, அதை நிலக்காட்சியின் ஒரு பகுதியாக, நீர்க்கோடாக மாற்றினார். அவர் இவ்வோவியத்தை ஒரு முறையான வரைகூடத்தில் (studio) வரையவில்லை. பாசிர் பாஞ்சாங்கில் உள்ள லிம்மின் கடற்கரையோரக் குடிலில் இதை வரைந்தார். மேலும், கீழ் வலதுபுறத்தில் உள்ள அந்த வடிவியல் கோடுகள் என்ன? அவை உண்மையில் அந்தக் குடிலின் கூரையால் விழும் நிழல்கள். அந்நிழல்கள் கித்தானின் மீது விழுந்தபடியே கூ அவற்றை ஓவியத்தில் வரைந்தார். அப்படியானால், உருவாக்கும் செயல்முறையே ஓவியத்தின் ஒரு பகுதியாக மாறும்போது என்ன நடக்கும்? அது அப்படைப்பை நீங்கள் பார்க்கும் பார்வையை மாற்றுமா?
Artwork details
Dimensions 3D: Frame measure: 232 x 232 x 3 cm
